காமிக்ஸ் அன்பர்கள் சமூகத்திற்கு வணக்கம். இரண்டு பாகமாக வெளிவந்த முன்னோட்ட பதிவுகளை (பகுதி 1 மற்றும் பகுதி 2), நீங்கள் ரசித்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த பகுதிகளில் பிண்ணூட்டம் இட்ட அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் என் நன்றிகள். அவைகளுக்கான என் பதிலை நீங்கள் அப்பதிவின் இறுதியில் காணலாம்.
முன்னோட்டத்தை தொடர்ந்து, வெகு நாட்களாக தயாராகும் விருந்து என்று அறிவிப்பில் மட்டுமே நிலைத்து கொண்டு இருந்த ராணி காமிக்ஸின் முதல் இதழை இந்த பதிவின் மூலம் நினைவு கூற போகிறோம்.
ஜூலை 01, 1984: ராணி காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் உலகத்தில், தன்னுடைய முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய நாள்.
இப்போது கதை களத்தை ஆராய்வோம். சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரை ஒட்டிய ஒரு பங்களாவில் ஒய்யார நடை போட்டு கொண்டு அறிமுகமாகிறார் ஜுலி என்ற ஒரு அழகி. அவரை அறியாமல் அவரை இரண்டு ஜோடி கண்கள் நோட்டம் இட்டு கொண்டு இருக்கின்றன. அதில் ஒருவர் நமது ஜேம்ஸ் பாண்ட்.
இது போதாது என்று அவருக்கு பக்கத்தில் இருப்பதும் ஜெசிகா என்ற ஒரு பெண் உளவாளி. இவரை மட்டும் எப்படி அழகிகள் சூழ்ந்து கொள்கிறார்கள் என்று வாசகர்கள் எண்ணி கொண்டு இருக்கும் போதே, ஒரு நீட்டி மடக்கும்(?) உலோக கம்பியின் உதவியுடன் அட்டகாச சாகசம் செய்து மாளிகையிள் நுழைகிறார் பாண்ட்.
உள்ளே சுகமாக குழியல் போட்டு கொண்டு இருக்கும் ஜுலியை மிரட்டி ஆடைகளை களைந்து, அவர் காதலன் ரூபி குடுத்த நெக்லஸ் மட்டும் அணிந்து கொண்டு அவரை ஆர தழுவ கட்டளையிடுகிறார். இந்த கண்கொள்ளா காட்சியை(?!) அவரின் பெண் சகா யாரும் அறியாமல் தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
ஏன் இப்படி ஒரு சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு காரியத்தை பாண்ட் செய்கிறார் என்று நாம் யோசித்து கொண்டு இருக்கும் வேளையில், ரூபி அங்கு வந்து சேருகிறார்.
ஆசையுடன் ஜுலியின் அறையில் நுழையும் ரூபியை தன் மயக்க குண்டின் மூலம் வீழ்த்துகிறார் பாண்ட். பின் இதே பிராயத்தை பயண்படுத்தி கட்டுமஸ்தான உடல் வாகு கொண்ட பார்னி என்ற குண்டு பெண்மணியை அவர் வீழ்த்த முயலும் போது, அவருக்கும் பார்னிக்கும் நடக்கும் சண்டை காட்சிகள் தத்ரூபம்.
பொதுவாக குண்டு ஆசாமிகளை சாதாராணமாக எடை போடும் நபர்களுக்கு இது ஒரு பாடம், என்பதை பாண்ட் உணர்ந்து கொள்ள நேருகிறது.
பார்ணியின் ஆக்ரோஷ தாக்குதலில் நிலை குழைந்தாலும், சமாளித்து அவரை வீழ்த்தி தன் ஹீரோ இமேஜை தக்க வைத்து கொள்கிறார்.
இந்த சண்டை காட்சி தத்ரூபமாக சொல்லபட்டுள்ள இந்த பக்கங்களை பாருங்கள்.
மாளிகையில் இருந்து தப்பிக்கும் நமது ஜோடி, மறைவிடம் வந்து சேருகிறது. பிறகு, ஜுலியிடம் தாங்கள் எடுத்த புகைபடங்களை காட்டி, ரூபிக்கு அவற்றை அனுப்பி வைக்க போவதாக மிரட்டுகிறார். ரூபி ஒரு நாள் முன்பு பரிசளித்த நெக்லஸை அவர் அணிய வற்புறுத்தியது, படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்று ரூபியை உணர வைக்கவே என்று புரிய வைக்கிறார்.
ரூபிக்கு இந்த விஷயங்கள் தெரிந்தால் தான் நிச்சயம் கொல்லபடுவோம் என்று உணரும் ஜுலி, பாண்ட் சொல்படி அவருடன் ஃப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு பயணமாகிறார்.
ஆனால், ஜுலிக்கு தெரியமால் பாண்ட் ரூபிக்கு மர்ம தபால் மூலம் படங்களை அனுப்பி வைக்கிறார். ஜுலி தனக்கு துரோகம் இழைத்தாக கருதும் ரூபி, அவளை பழி வாங்க துடிக்கும் போது ஒரு அனாமதேய தொலைபேசி, ஜுலி மார்க் என்ற தன் காதலனுடன் பாரீசில் தங்கும் விலாசத்தை தகவலாக தருகிறது. ரூபி ஆட்கள் பாரீஸ் சென்றடைகிறார்கள்.
ஆனால், அவர்களே அறியாமல் அவர்களை நோட்டம் இடும் ஒரு பெண்மணி பாண்டுக்கு இத்தகவலை தெரியபடுத்துகிறார். கொலையாளிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஜுலியை அங்கு அழைத்து செல்லும் பாண்ட், கொலையாளிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல நடித்து, அவரை கண் காணா இடத்துக்கு போய் பிழைத்து கொள்ள அறிவிருத்துகிறார். செலவுக்கு ரூபியிடம் இருந்து தான் கைப்பற்றிய வைர மோதிரங்களை குடுத்தனுப்பி வைக்கிறார்.
இங்கிலாந்தில், பாண்டின் லன்டன் உளவு தலைமை நிலையத்தில், அவருடன் உறையாடும் அதிகாரி வில்லியம், ரூபி தங்கள் நாடகத்தில் ஏமாந்து விட்டதை பற்றி விவாதிக்கிறார்.
ரூபியிடம் இருந்து கையகபடுத்தி இருந்த சங்கேத தகவல்கள் மூலம் அவரின் ஆப்பிரிக்க ஏஜெண்ட் குர்த் பற்றிய விவரங்களை பாண்டுக்கு தெரியப்படுத்துகிறார் வில்லியம். கூடவே, இது சம்பந்தமாக நியூயார்க் வருகை தந்து இருக்கும் டமாரா என்ற நீக்ரோ மாடல் அழகியை சந்திக்கும் படி அறிவுறுத்துகிறார்.
அமெரிக்க நகரமான நியூயார்க் சென்றடைகிறார் பாண்ட். அவருக்கு, அதிரடி பிரவேசத்தை பற்றி சொல்லியா கொடுக்க வேண்டும். அலங்கார போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் டமராவை, அவர் உடை மாற்றும் அறையிலேயே சந்திக்கிறார். அவரிடம் சிற்பியான அவர் தந்தை கார்வர் பற்றி விசாரிக்கும் பாண்ட், நீக்ரோ புரட்சியில் அவர் தந்தையை பகடை காயாக பயன்படுத்தப்படும் சாத்தியத்தை விளக்குகிறார்.
மேற்கொண்டு ரகசியமாக பேச அவர் அறைக்கே (?) அழைத்து செல்லுகிறார் டமாரா. பாண்ட் டமாராவிடம், ரூத் தலைமை ஏற்று நடத்தும் ரூபயத் என்ற அமைப்பை பற்றி விளக்குகிறார். அந்த அமைப்பு மேற்கு கிழக்கு நாடுகளிடைய குற்றவாளிகளை கடத்தும் காரியம் புரிவதாகவும், கார்வர் அவ்வடிபடையிலேயே குர்த் மூலம் அகாராவிற்கு கடத்தபட்டிருக்கலாம் என்று விவரிக்கிறார். இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின், அகாரா நகரத்தை சென்றடைகின்றனர்.
அகாராவில் குர்த் சதிவேலைகளுக்கு பயண்படுத்தும் ஓமர் டிரேடிங் கம்பெணியில், தங்கள் அகாரா ஏஜெண்ட் நூகுவாவுடன் பாண்ட் இரவில் துப்பு துலக்க நுழைகிறார். இக்கட்டத்தில், ஜன்னலோரம் இருக்கும் இடி மின்னல் தெய்வம் ஷாங்கோ சிலை, இவர்களை தாக்கும் காட்சி திகிலுட்டும் நிமிடங்கள்.
அதில் இருந்து தப்பும் நம் சாகச ஜோடி, தந்திகள் சிலவற்றை நுண்-படங்கள் எடுத்து கொண்டு திரும்புகிறது. அத்தகவல்கள் மூலம் ஆப்பிரிக்காவில் நீக்ரோ புரட்சி ஏற்படுத்த ரூபி மற்றும் குர்த் காரியமாற்றுவது விளங்குகிறது.
அடுத்த கட்டமாக, குர்த் மூலம் அனுப்பட்டது போல ஒரு பொய் தந்தியில், ஜுலியின் காதலன் மார்க் நீக்ரோ புரட்சிக்கு எதிராக சதி வேலை செய்வதாக, ரூபிக்கு அனுப்பி வைக்கிறார். அவர் எதிர்பார்த்தது போல, ஏற்கனவே ஜுலி மீது வெறியுடன் இருக்கும் ரூபி காணாவிற்கு புறபட்டு வருகிறார்.
அதே போல் குர்திற்கு, காணாவிற்கு தான் மற்றும் சிற்பியின் மகள் டமாரா வர போவதாகவும், டமாராவை குர்த் சந்திக்க வேண்டும், என்று ரூபி மூலம் வருவது போல ஒரு பொய் தகவலை சேர்ப்பிக்கிறார் பாண்ட்.
அவர் எதிர்பார்த்தது போலவே, டமாராவை சந்திக்கும் குர்த், சதி வேலை பற்றி அறியாமல் அவளை அவள் தந்தை இருக்கும் மறைவிடத்திற்கு கூட்டி செல்கிறான். (சமயம் கிடைக்கும் போது எல்லாம் நேரத்தை வீணடிக்காமல் ஜேம்ஸ் “காரியமே” கண்ணாக இருப்பதை இங்கு கவனியுங்கள்).
யாரும் அறியாமல் அவர்களை பின் தொடரும் பாண்ட் மறைவிடத்தை அணுகுகிறார். இந்த கட்டத்தில் காவல் நாய்கள், மற்றும் காவலாளிகளுடன் அவர் மோதும் காட்சிகள் தத்ரூபமாக வரையபட்டிருக்கும்.
காவலாளிகளை சரி கட்டி விட்டு, கார்வரை சந்திக்கும் பாண்ட், அவரிடம் கரும் புயல் என்ற சதி வேலை பற்றி விவரிக்கிறார். ஆனால் கார்வரோ, அது தான் பக்கத்து ஆப்பிரிக்க நாடான பவுண்டா குடியரசுக்காக தயாரிக்கும் ஒரு சிலை தான் என்றும், அதற்காக மட்டும்தான் தன்னை பணியில் அமர்த்தி இருப்பதாக வாதிடுகிறார்.
உண்மையை அறிய சிலை வார்ப்பு தொழிற்சாலைக்கு அவர்களை அழைத்து செல்கிறார் கார்வர். அங்கு சிலைகளை ஆராயும் பாண்ட் அவைகளில் வெடிகுண்டு பொருத்தபட்டதை கண்டு பிடிக்கிறார். பவண்டா குடியரசு தலைவரை கொன்று, அதன் மூலம் கானா நாட்டின் மீது பழி விழ செய்வது.
அதன் தொடர்ச்சியாக வடக்கத்திய சதி என்று பிரகடனபடுத்தி, ஆப்பிரிக்காவில் ஒரு பெரும் போரை மூல செய்வதுதான் கரும் புயல் சதி என்று கண்டு பிடிக்கிறார்.
இதற்கிடையே தான் சூழ்ச்சியில் வீழ்ந்து போனதை உணர்ந்து கொள்ளும் ரூபி தன் அடியாட்கள் சகிதம் வார்பு கூடாரத்தில் பாண்டை மடக்குகிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க மின் விளக்குகளை அணைக்கும் பாண்ட், வார்பட கூடத்தில் மறைந்து கொள்கிறார்.
உலையில் உமிழும் உலோக ஜுவாலை ஒளியில் அங்கு நடக்கும் சண்டை காட்சிகள் அபாரம். கருப்பு வெள்ளை சித்திரத்திலும் அதை திறம்பட கையாண்டிருப்பது, கதை சித்திர ஓவியரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசியில் கபட நாடகம் ஆடி வீழ்த்த முயற்சிக்கும் ரூபியை அவர் உலைக்கலன் உலோக திரவத்தை கவிழ்த்து சாகடிக்கிறார். ரூபியின் கூட்டாளிகளும் சுற்றி வளைக்கபடுகிறார்கள்.
இவ்வழியே கரும் புயல் என்ற பெயரில் நடக்க விருந்த நீக்ரோ புரட்சியை வெற்றிகரமாக தடுத்து சாகஸம் புரிகிறார் ஜேம்ஸ் பாண்ட்.
கடைசி காட்சிகளிள் டமாராவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பாண்டிடம், டமாரா ஓட்டலுக்கு சென்று வெள்ளை - கருப்பு கலக்கும் கலாசார பரிவர்த்தனை (?) உபசாரத்தை பற்றி சங்கேத அழைப்பு விடுப்பதோடு, மொத்தம் 64 பக்கங்கள் கொண்ட இந்த ராணி காமிக்ஸின், மறக்க முடியாத ஜேம்ஸ் பாண்டின், கண்டம் விட்டு கண்டம் பாயும் (உண்மையிலேயே, ஒரே அர்த்தத்துடன் !!), முதல் சாகஸம் அமர்க்களமாக முடிவடைகிறது.
ஆனால், இந்த கதையில் பாண்டின் செய்கைகள் சற்று ஓவர் ரகமே. கழக கூட்டத்தை சிக்க வைக்க அவர் ஒன்றும் அறியாதே ஒரு பெண்ணை பகடை காயாக பயன்படுத்துவது, அவரை துன்புறுத்துவது போன்ற செயல்கள், பாண்டின் மீது வெறுப்பு வர செய்ய கூடியவை. வில்லியே ஆனாலும், பெண்ணாண பார்ணியை, அவர் சுவரில் அடித்து வீழ்த்துவது இன்னும் கொடூரம். எனக்கு தெரிந்து பாண்ட் இப்படிபட்ட ஒரு கதை கருவில், ஒரு வில்லனை போல பின் எப்போதும் தோன்றியதில்லை.
பிற்பாடு வெளியான பல பாண்ட் கதைகள் அவரின் இமேஜை காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலபடுத்தியது என்பதற்கு ஆதாரம், சென்ற பதிவில் இடம் பெற்ற ஓட்டெடுப்பில், அவர் வேதாளருடன் (மாயாவி) இன்றும் போட்டி போட்டு கொண்டு முன்னிலை வகிப்பதில் இருந்தே அறிய வருகிறது.
எனக்கு காமிக்ஸை அறிமுகம் செய்த என் அண்ணன், இந்த புத்தகத்தை அது வெளியான சமயத்தில் வாங்கவில்லை. அவர் 2 ம் இதழில் இருந்தே புத்தகங்கள் வாங்க ஆரம்பித்திருந்தார். (அல்லது, வாங்கிய புத்தகத்தை, என் கண்களுக்கு அவர் காட்டாமல் இருந்தும் இருக்கலாம்) அதற்கு காரணம், பிற்பாடு இந்த புத்தகத்தை நான் பழைய புத்தக கடைகளில் வாங்கிய பிறகே தெரிந்தது.
ராணி காமிக்ஸின் முதல் இதழான இதில் அப்பட்டமான நிர்வாண காட்சிகள் ஏராளம். அழகிய மங்கைகள் நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஆண்கள் சட்டை கழற்றுவதை போல மார்பு கச்சையை கழட்டி விட்டு நடமாடுவதை, தமிழக ரசிகர்கள் எவ்வகையில் ஒப்புக்கொள்வார்கள் என்று அறியாமல், ஓவியங்களை ஒரிஜினல் காட்சிகளுடனே திரு.ராமஜெயம் வெளியிட்டு இருந்தார்.
ஒரிஜினல் சித்திரங்களை சேதபடுத்த கூடாது என்ற எண்ணம் இந்திய அளவில் காமிக்ஸ் பதிப்பகத்தினரினிடம் ஒன்றும் புதியது இல்லை எண்றாலும், தமிழில் இப்படி பிரசுரவமாவது முதல் முறை என்பதால் திரு.ராமஜெயம் பல தரப்புகளில் குட்டு வாங்கி இருக்க கூடும். அதன் பிரதிபலிப்பு இதற்கு அடுத்து வந்த இதழ்களில் நடந்த சென்ஸார் மூலம் நாம் அறியலாம். ஆனாலும், பெற்றோர்கள் இந்த புத்தகத்தை எப்படி ஒதுக்கி இருந்தாலும், இளம் சிறார்களிடம் ராணி காமிக்ஸை பெரிய அளவில் பிரபலப்படுத்த ஒரு காரணியாக, இந்த முதல் இதழ் மாறி இருக்கலாம், என்று இப்போது நாம் நினைவு கூறலாம்.
பள்ளி சிறுவனான எனக்கு அந்த புத்தகத்தை வீட்டில் இருந்து மறைத்து பாதுகாப்பது பிரம்ம பிரயத்தன காரியமாக இருந்தது. இதை சாக்காக வைத்து கொண்டு, பால்ய காமிக்ஸ் நண்பன் ஒருவன், நான் எனது வீட்டாரிடம் மாட்டி கொள்வேன் என்று மிரட்டி, புத்தம் புதிதாக இருந்த இந்த புத்தகத்துக்கு பதிலாக ஒரு மொக்கை காமிக்ஸை பண்ட மாற்று முறையில் தலையில் கட்டி விட்டது இன்னொரு கதை.
இந்த தமிழ் கதை சித்திரத்தின் மூலம், 1975ல் இங்கிலாந்தின் டெய்லி எக்ஸ்பிரஸ் (Daily Express) நாளிதழில் சித்திர தெடர்கதையாக வெளி வந்த த ப்ளாக் ரூபி கேபர் (The Black Ruby Caper) ஆகும். இது, அப்பத்திரிக்கையில் பாண்ட் சித்திர தொடர் கதையின் 3 வது அத்தியாயம். பட கதை வரிசையின் படி 34 வது தொடர். கதாசிரியர் ஜிம் லாரண்ஸ் (Jim Lawrence), மற்றும் ஓவியர் யாரோஸ்லவ் ஹோரக்கின் (Yaroslav Horak) வெற்றி கூட்டணியில் உருவான சித்திரக்கதை.
இத்துடன் ராணி காமிக்ஸின் முதல் புத்தகத்தை பற்றிய இப்பதிவு முடிவுக்கு வருகிறது.
கதையுடன் பயணித்து விமர்சித்ததால் நீண்டு போன இப்பதிவில் கதாசிரியர்களை பற்றி இன்னும் பேசுவதை விட, அவர்களை பற்றி இப்பதிவின் ஆங்கில மொழியாக்கம், தாய் கழகமான காமிக்கியலில் சிறிது காலத்தில் வெளியாகும் போது, மேலும் பார்க்கலாம். மூல கதையின் ஒப்பீடும் அதில் அடங்கும்.
அடுத்த பதிவில் ராணி காமிக்ஸ் இரண்டாம் இதழை பற்றி அலசுவோம்.
ஆசிரியரின் கவிதை வரிகளுடன் முதல் இதழில் உட்பக்கத்தில் வெளியான அதன் விளம்பரத்தையும், பின் அட்டையில், அந்த காலத்தில் மிகவும் புகழ் பெற்ற சூதாட்ட பொழுதுபோக்கான லாட்டரி சீட்டுகள் விளம்பரத்தையும் அருகே காணுங்கள்.
லாட்டரி விளம்பரம் இல்லாமல், அடுத்த இதழ் அறிவிப்பு பின் அட்டையில் வெளி ஆகி இருந்தால், முதல் இதழ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், பணம் பண்ண நினைக்கும் யுக்தி அல்லவா அது, தினத் தந்தி குழுமத்தினர் அதில் கை தேர்ந்தவர்கள் என்றும் சொல்லத்தான் வேண்டுமா.
முடிவுரையாக, ராணி காமிக்ஸ் வலைபூவிற்கு தாங்கள் தரும் ஆதரவை கண்டு நான் மிகவும் மன மகிழ்கிறேன். இது வரை வெளியான பதிவுகள் அறிமுகம் மற்றும் முன்னோட்டம் தொனியிலேயே இருந்தாலும், வலைபூ தொடங்கிய குறுகிய கால கட்டத்தில், 1000’க்கும் அதிகமான வாசகர்கள் வலைபூவிற்கு வருகை தந்து இருப்பதே, அதற்க்கு சிறந்த சான்று. தாய் மொழியில் நமது அபிமான காமிக்ஸ் பற்றி படிக்க தங்களிடம் இருக்கும் ஆர்வம் அதில் வெளிப்படையாக தெரிகிறது.
தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்கிட வேண்டும் என்று கேட்டு கொண்டு, கூடவே வருகை தரும் அனைவரும் முடிந்த வரை தங்கள் கருத்துகளை இந்த பதிவை பற்றியும், ராணி காமிக்ஸ் முதல் இதழுடன் உங்கள் அனுபவத்தை பற்றியும், கண்டிப்பாக பதிந்து செல்லுமாறு பணிவுடன் வேண்டி கொள்கிறேன். இந்த வலைப்பூவின் நோக்கமே, அந்த இள பிராய கால கட்டத்தை நினைவு கூறுவது தானே. உங்கள் கருத்துகளை முடிந்த வரை தமிழில் பதிந்தால் இன்னும் சிறப்பு. அதற்கு வலப்பக்க காரணியை உபயோகபடுத்தலாம்.
இப்பதிவை படித்து கால இயந்திரத்தில் பின் நோக்கி பயணம் செய்தது போல நீங்கள் உணர்ந்தால், இந்த பதிவுக்கு உழைத்த நேரம் இனிதே கழிந்தது என்று நான் கருதுவேன். இப்பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்கும் ஆர்வத்துடன், மீண்டும் அடுத்த ராணி காமிக்ஸ் பதிவில் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி.
அச்சச்சோ,அச்சச்சோ,
ReplyDeleteஎதப் பாக்குறது,எத விடுறது என்னே தெரியலய. ஆனா எல்லாத்தையும் பாத்தாகணும். ரஃபிக் பேராண்டி தாராள மனத்தோட இப்படங்கள போட்டதிற்கு நன்றிப்பா. பதிவின்னா இது தாண்டா பேராண்டி பதிவு. 100 நாள் நிச்சயம்.
ரஃபிக்,
ReplyDeleteஅழகுத் தமிழில் அழகான, அழகியைத்தேடி பதிவு அழகோ அழகு. இடையில் ஜாலியான கிண்டல் கமெண்ட்ஸ் கலக்கல் தான் போங்கள்.
பள்ளியில் படித்த போது நண்பர்கள் தந்த காமிக்ஸாக கிடைத்ததே அழகியைத்தேடி, ஆனால் உள்ளூர் ஆர்டிஸ்டான சக நண்பர், பெற்றோரிடமிருந்து தப்பிக் கொள்வதற்காக அழகிகளிற்கு தானே பேனாவால் ஆடை அணிவித்திருந்தது கொடுமையிலும் கொடுமை.
இப்படி ஒர் கதையைக் கண்ட இளம் சிறார்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதனை சொல்லவா வேண்டும். பாடசாலை முழுவதும் குசுகுசுவென அடங்கிய குரலில் தகவல் பரிமாற்றம், சங்கேத மொழியில் உரையாடல், பாடப் புத்தகங்களிற்குள் வைத்து ஏதோ ஒர் ரஷ்ய உளவாளி, அமெரிக்க அரசிற்கு ரகசிய டாக்குயூமெண்ட் கொடுத்த எஃபெக்டில் காமிக்ஸ் கைமாறும். இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்ட காமிக்ஸ்கள் தமிழ் வரலாற்றில் கம்மியே.
அடுத்த சுவாரஸ்யம் இதழின் அட்டைப்படம். அட்டையின் பளபளப்பிலும், வழுக்கிச் செல்லும் லாமினேட் அட்டையும் புதுசோ புதுசு. அட்டையை தடவிப்பார்த்தாலே ஒர் கிறுகிறு.
மிகுந்த எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் , நல்ல வாசகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி தர அழகியைத்தேடி அச்சாரம் இட்டது என்றால் அது மிகையாகாது.
நீங்கள் கூறியபடியே ஜேம்ஸ் இக்கதையில் கொஞ்சம் மோசம் தான்.ஆனால் பின் வந்த பல கதைகள் நல்ல கதையம்சமுள்ள கதைகள் ஆனபடியால் பாண்ட் எங்கள் இதயத்தில் இன்றும் இருக்கிறார்.
கருத்துக்கள் எழுதும் பகுதி, பதிவின் கீழேயே இருந்தால், பதிவினை மீண்டும் பார்த்துக் கொண்டு, கருத்துக்களை எழுத வசதியாகவிருக்கும் என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம் ஆகும்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
Nice post Rafiq.
ReplyDeleteWhat is surprising is Ramajayam has claimed that Rani Group is the first(?) one to buy the originals from a foreign source and get them translated in Tamil. I'm not sure what he is trying to say by this forward. Either he is not aware that Muthu Comics and Indrajal, and many others before them have done this. Which means he does not know what is happening in Tamil comics industry, which I doubt very much. No one will enter a market without doing market research as to what is the current market situation. Or he would have thought, as the circulation for other comics are not so much, he can get away with this claim by being the most circulated magazine. One thing is sure, this forward is written by someone who does not know anything about Tamil comics at that time.
I have not read this issue so far, but read only the original issue in Titan. So I was surprised to see the original pictures are used as it is in this issue. Yes, I'm sure he would have got some nice reviews from many readers, mostly parents, after claiming that this issues are for all in the family. I do not know which family in Tamil Nadu(atleast in 1984) can read this book together.
I remember reading the Paalaivanathil Thanner Thanner and subsequent issues. Also I have managed to get many of the later issues easily. I thought the reason why this was not easily available in the second hand shop was because of its issue no:1 status. Now I realise that may not be the case. Many readers who have bought this issue may not have sold it in a second hand shop. But would have kept it in a safe place as a quick reference for human anatomy :-)
Regards,
Muthufan
எனது முதல் புத்தகம். நன்றி.
ReplyDelete//பள்ளி சிறுவனான எனக்கு அந்த புத்தகத்தை வீட்டில் இருந்து மறைத்து பாதுகாப்பது பிரம்ம பிரயத்தன காரியமாக இருந்தது.//
ReplyDelete11 வயதில், முதல் முதலில் அந்த படங்களை பார்த்தபோது, பெரியவர்கள் பார்த்தால் என்ன ஆகுமோ என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. அதனால் சட்டைக்குள் மறைத்து எடுத்து போனதும், வழியில், வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பரொருவர் என்ன அது என்று கேட்டு வாங்கி, காமிக்ஸ் ஆ என்று கேட்டு புரட்டி ஆனால் சரியாக பார்க்காமல் திருப்பி கொடுத்து விட, அந்த திகில் திருப்பம் மட்டும் கதையை விட, அதில் வந்த படங்களை விட நினைவில் நிற்கின்றது. உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிகளுக்கும் மிக்க நன்றி!
//வழுக்கிச் செல்லும் லாமினேட் அட்டையும் புதுசோ புதுசு.//
ReplyDeleteரொம்ப சரி. ராணி காமிக்ஸ் அந்த விதத்தில் ஒரு தனி இடம் தான்.
மிக்க தரமான, முழுமையான பதிவுகளுக்கு நன்றி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஅட்டகாசமான வலைப்பதிவு. எனது வலைப்பதிவில் 1960களின் இறுதியில் குமுதத்தில் தொடராக வந்த ’முகமூடி’ (மாயாவி) பற்றி எழுதியிருக்கிறேன். எனவே முதன்முதலில் காப்பிரைட் வாங்கி பதிப்பித்தது ராணி காமிக்ஸாக இருக்க முடியாது. பொறவு வாரேன்.
ReplyDeleteNo one can beat Yaroslav Horak in depicting fight sequences in such a thrilling manner. This story was one of the stories that were not published in the Madras Mail and I had missed it, until I got a Diamond comic issue of this a few years ago. I have always felt offended with British comic strips like Bond, Modesty Blaise, Garth etc depicting immodest clothing, thus spoiling a perfectly nice story...The early Horak strips such as "The man with the golden gun" were equally effective without the author having to resort to such gimmicks.
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே.
ReplyDeleteஅற்புதமான கோர்வையுடன் இருந்த இந்த பதிவு, இதுவரை உங்கள் பதிவுகளிலேயே சிறந்த பதிவு என்று கூறலாம் (தமிழ், ஆங்கிலம் இரண்டும் கலந்து).
பல மாதங்கள் அழகிக்காக காத்து இருந்தது வீண் போக வில்லை.
சிறப்பான வடிவத்தில் இருந்த இந்த பதிவை மென்மேலும் மெருகூட்ட கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுக:
எழுத்துப் பிழைகள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் (ஒரு முளூ நீள சாகசத்தை,அழகிகள் சூல்ந்து கொள்கிறார்கள் etc)
பொருட் பிழை இல்லாமல் பார்த்து பார்த்து கொள்ளுங்கள்.
கதையின் ஒரிஜினல்லோடு கம்பேர் செய்யும்போது, முழுமையாக செய்யுங்கள். உதாரணமாக இந்த கதையின் ஆங்கில அமைப்பில் இருக்கும் கதை, ராணி காமிக்ஸ் இதழில் வந்த கதைக்கும் மாற்றங்கள் இருக்கும் (பெரிய அளவில் இல்லை என்றாலும், குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள் அவை).
கதையின் மற்ற வடிவங்களை பற்றி கூறினாலும் தவறில்லை (உங்களிடம் அவை இருக்கும் என்று நம்புகிறேன் - உதாரணமாக இந்த கதை மும்பை ஸ்டார் காமிக்ஸ் இதழில் வந்து உள்ளது. அதைப் போலவே டைமண்ட் காமிக்ஸ் நிறுவனத்தினரும் இதனை வெளியிட்டனர்).
ராணி காமிக்ஸ் கதைகளில் விமர்சன போட்டி கட்டங்கள் (கதையின் முக்கிய கட்டம் - வாசகர்கள் தேர்ந்து எடுத்து அனுப்புவர்), விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிடலாம்.
இவற்றை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். நம்முடைய ராணி காமிக்ஸ் பிளாகின் மேம்பாடிர்க்காகவே இதனை எழுதுகிறேன்.
செழி.
Dear Rafiq,
ReplyDeleteIt was nice review abt first Rani comics book. Good to see the scans of rare comics in net.
Thanks for it... First time seeing the details of this comics original source..Your comments along the story were quite funny...
Regarding the comics as muthufan said i didn't get a chance to read it first time. My friends said abt this 'uniqueness', so at a very late time got a chance to read it...
after few years i got this book form a 2nd hand shop & still with me. When I read it I am surprised with the boldness of thanthi group to publish book with such images..
I remember Mr vijayan's interview in a magazine few years back. The reporter asked - "People think comics is for adults only - do you agree?". Mr vijayan answered with his experience & explained truth.
Initially i was surprised with this question by reporter. Then thought may he is asking due to issues like this from Rani comics. To my knowledge no other Tamil comics had such bold picture(comic gurus can correct if its wrong)...
To add some more to your blog.the same comics was re-published by Rani comics during its dying age(got that copy also). In that issue to the surprise, all bold pictures were dressed (!!) by the local artist in different colors..
Thanks for bringing back good old memories....
காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
அட... அட.... ரொம்ப நல்ல புத்தகமா இருக்கே....
ReplyDeleteஇந்த புத்தகம் என் கண்ணில்யே தட்டுப் படவில்லையே தல.....
நண்பா நான் தான் சக்கரை சுரேஷ் யுவகிருஷ்ணா பதிவில் பார்த்தேன் உங்க கருத்தை உங்களுக்கு நேரம் இருக்கும் போது வந்து படியுங்க அவரது பதிவு முயற்சி எடுக்கும் நம்மை காயபடுத்து அதற்க்கு எல்லாம் சளைத்தவர்கள் இல்லை ... என்று உழைக்கிறோம்
ReplyDeleteComing from Neerotam...
ReplyDeleteஎனது பத்தாவதுவயதில் படித்தது….
நேற்று படித்தது போல இருக்கு...
Next week front attai padam(yellow in color)… that’s cowboy story.. not bond I believe
That KAS advt…. ellam niyabagam irukku…
That’s life man…. Now so many short stories in Kutti TV, Pogo, jetix..etc …But?
அழகியத்தேடி இதழை நினைத்தாலே நினைவுக்கு வரக்கூடியது 'அந்த' பட
ReplyDeleteங்கள்தான். அருமையான சித்திரங்கள், வழு வழு அட்டை போன்ற எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் சிறுவர்களுக்காக வெளியிட்ப்பட்ட ஒரு இதழில் அத்தகைய படங்களை ஆசிரியர் தவிர்த்து இருக்க வேண்டும். எனது நல்ல காலம், கதை புத்தகங்கள் படிப்பதை எனது அப்பா கண்டுகொள்ள மாட்டார். மேலும் சிறுவயதிலிருந்தே எனக்கென சில விஷயங்களை குறிப்பாக எனது காமிக்ஸ்களை மிகவும் பத்திரமாக வைத்திருப்பேன். அவற்றை பிறர் கையாலும் வாய்ப்புகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. இருப்பினும் கூட அந்த இதழை மட்டும் மறைவாகத்தான் வைத்திருந்தேன். ஏனெனில் பெரியவர்கள் கண்டால் நமது காமிக்ஸ் பிழைப்பில் எளிதில் மண்ணை அள்ளி போட்டு விடும் அந்த அழகியின் படங்கள் என்ற பயம்தான் காரணம்.
ராணிக்காமிக்ஸின் ஆரம்ப கால இதழ்களை நண்பர்களிடம் இரவல் பெற்றுதான் படித்தேன். மற்ற இதழ்களை எளிதில் படித்தாலும், அழகியைத்தேடி வெளியான சுமார் 8 வருடங்களுக்கு பின்னர்தான் அதனை படிக்கும் (அல்லது பார்க்கும்...!) வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த இதழை கண்ட பெரியவர்கள் அதனை ஒழித்துக் கட்டியிருப்பார்கள் என்பது என் எண்ணம். நண்பர்களிடம் அதனை பார்த்ததாகக்கூட நினைவு இல்லை.
இந்த இதழில் ஜேம்ஸ் சற்றே வக்கிரமாக-வில்லன் போல நடந்து கொண்டதை நீங்கள் குறிப்பிட்ட பின்னர்தான் நானும் உணர்ந்தேன்.
நிஜமாகவே ஒரு பாண்டு படம் பார்த்த உணர்வு . நீங்கள் குறிபிட்டது போல காசு பார்ப்பதில் தினத்தந்தி நிறுவனம் கில்லாடிகள்தான் , அது போல லயன் காமிக்ஸ் செய்திருந்தால் அடுத்தடுத்து வந்த காமிக்ஸ் புத்தகங்கள் நமக்கு வண்ணத்தில் கிடைத்திருக்கலாம் .
ReplyDeleteஅருமையான பதிவுகளுக்கு நன்றி...
ReplyDeleteஎன்னுடைய சிறுவயது ஞாபகத்தை மீட்டு கொண்டுவந்ததற்கு நன்றிகள் பல
தினேஷ்: திரு.விஜயனின் நேர்காணலை நியாபகம் வைத்து கருத்திட்டுள்ளீர்கள். உண்மையில், அந்த காலத்தில் காமிக்ஸ் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் தான் ராணி காமிக்ஸ் குழுமத்தினரிடம் அதீதம் இருந்திருக்க வேண்டும். அதனால் சித்திரங்கள் நம் கலாசாரத்திற்கு ஈடாக இருந்ததா என்று அவர்கள் கவனம் செலுத்தி இருக்க மாட்டார்கள். 3வது இதழில் வெளி வந்த பாண்ட் கதையிலேயே லோக்கல் ஓவியர்கள் விளையாட்டு தெரிய ஆரம்பித்து இருந்ததால், பிற்பாடு மறுபதிப்பில் அவர்கள் விளையாட்டு எதிர்பார்த்த ஒன்று தானே.
ReplyDeleteசந்தேகமே இல்லாமல், இப்படி பகிரங்க ஓவியங்கள் தாங்கி வேறு எந்த தமிழ் காமிக்ஸும் வெளி வந்ததில்லை. எனவே உங்கள் கூற்று சரிதான்.
சுரேஷ்: என்ன இன்னும் இந்த புத்தகம் படிக்கவில்லையா? வாழ்க்கையில் நீங்கள் மிக சிறந்த கட்டத்தை விட்டு விட்டீர்களோ தல...
சக்கரை சுரேஷ்: உங்கள் பதிவுகளை வழக்கமான உற்சாகத்துடன் தொடருங்கள். நண்பர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. தூற்றுவோர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
அசோக்: பால்ய நாட்களிள் படித்த எதையும் நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோமே, அதிலும் இந்த கதையை, முக்கியமாக படங்களை மறக்க முடியுமா..?
இக்கால குட்டி கதைகள் அந்த காலத்தின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்ட முடியாது.
அய்யம் அவர்களே: ஒரு வழியாக வந்து சேர்ந்த விட்டீர்களா... உங்கள் பிண்ணூட்டத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தேன்.
உண்மையே, சிறுவர்கள் மனம் மாற வாய்ப்பு இருந்தாலும், ராணி காமிக்ஸ் ஆரம்பித்த கால கட்டத்தில் அவர்கள் இதை சிறுவர்களுக்கான புத்தகம் என்று எண்ணி இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே.... ஒரு வேளை அனைத்து வயதினரும் படிக்க ஏதுவாக இருக்கட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாமோ....
உங்களை போன்றே எனக்கும் அந்த பயம் வாட்டி வதைத்து கொண்டு தான் இருந்தது. நமக்கு விவரம் தெரியும் வரை, அதை பாதுகாத்த விஷயமே ஒரு தனி பதிவாக இட ஏற்றது தான். :) தொடருங்கள் உங்கள் ஆதரவை
டைகர்: விளம்பரம் ஒன்றுதான் லயன், ராணியிடம் இருந்து கத்து கொள்ள வேண்டிய விஷயம்..... தினத்தந்தி போல ஒரு குழுமம் பிண்ணனியில் இருந்து இருந்தால் நமது ஆசிரியர் எவ்வகை சாதனை செய்திருப்பார் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. பாண்ட் படம் பார்த்தது போல இருந்தது என்று கூறி என்னை புளகாங்கிதம் கொள்ள செய்து விட்டீர்கள். உங்கள் மதிப்பை வரும் பதிவுகளிலும் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
கண்ணா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
அனைவரின் கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. உங்களை மகிழ்விக்க புதிய ராணி பதிவொன்று காத்து கொண்டிருக்கிறது. அங்கே சந்திப்போம்.
எனக்கு இந்த காமிக்ஸ் முதலில் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்குமான மொத்த புத்தகமும் வேண்டும். எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்
ReplyDeletevazhthukkal sagothara!
ReplyDeleteenrenrum anbudan johny
தோழர்களே, தாமதமான பதிலளிப்பிற்கு மன்னிக்கவும்.
ReplyDelete@ Jeeves: நண்பரே, பழைய புத்தக கடைகளில் தேடி பார்ப்பதை தவிற வேறு வழி இல்லை. என்னிடம் ராணி காமிக்ஸ் 80 சதவிகிதம் இருக்கிறது, ஆனால் அதை நான் கிட்டதட்ட 20 வருடமாக சேர்த்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு உதவ யாராவது அவர்கள் சேகரிப்பை மொத்தமாக கொடுத்தால் மட்டுமே நடக்கும். உங்கள் தேடல் வெற்றியில் முடியும் என்று பிரார்த்திக்கிறேன்.
@ Johny: நன்றிகள் சகோதரரே. பதிவு உங்களை திருப்திபடுத்தும் வகையில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லையென்றால் காவல்காரரின் குரோதத்தை சமாளிக்க வேண்டுமல்லவா :) ?